லிபியாவில் மோதல். ; 23 பேர் பலி, 140 பேர் காயம்.

லிபியா தலைநகர் திரிபோலியில் இரண்டு கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற கடும் மோதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 140 பேர் காயமடைந்ததாக லிபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.

இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் சண்டை நடந்து வருகிறது.

இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனிடையே, லிபியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் அப்தில் கானி அல் கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென மோதல் வெடித்தது.

கிளர்ச்சியாளர்களின் இரு தரப்புக்கு இடையே நடந்த இந்த மோதலில் 23 பேர் உயிரிழந்தனர். 140 பேர் படுகாயமடைந்தனர். பல்வேறு கட்டிடங்கள், வாகனங்களுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.