வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை 

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் நபர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.  

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதுடைய ஆண் ஒருவரே எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்  இறுதியாக மொரவெவ பகுதிக்கு வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,

இவர்  பயணித்ததாக கூறப்படும் வாகனம் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வில்கம் விகாரைப் பகுதியை கடந்து பயணித்துள்ளதை அப்பகுதியில் இருந்த சி.சி.ரி.வி காணொளி மூலம் கண்டறிந்தனர்.  

அதன் பின்னர் குறித்த வாகனம் மொராவெவ பகுதிக்கு வராத நிலையில் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.  

இதன்போதே பன்மதவாச்சி காட்டுப் பகுதியில் இவர் பயணித்ததாக கூறப்படும் வாகனத்துடன் எரிக்கப்பட்ட நிலையில் இவருடைய  சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தனிப்பட்ட காரணத்திற்காக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும்,

 சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவருடைய உறவினர்கள் உட்பட பலரிடம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.