வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தாய் மரணம்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார்.

வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த  78 வயதுடைய இ.வள்ளியம்மா என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகி இருந்த நிலையில்) நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்

மகனைத்தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராக தீவிர பங்களிப்பு வழங்கி வந்த நிலையில் மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

சிறீலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக் கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக  மகனை காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.