வவுனியாவில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றில் அதிக போதை மாத்திரைகள்.

வவுனியாவில் உள்ள வைத்தியர் ஒருவர் தனியார் மருத்துவ நிலையம் ஊடாக மாதாந்தம் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மருந்து மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவ நிலையத்தின் பெயரில் மாதாந்தம் 400 பெட்டி உயிர்கொல்லி போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளார்.

அவர் வவுனியாவிலுள்ள அரச மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், இவ்வளவு பெருந்தொகை போதை மாத்திரை மருத்துவ தேவைக்காக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக பலரும் சுட்டி காட்டி வரும் நிலையில் பொறுப்பு வாய்ந்த மருத்துவர் ஒருவர் தனது மருத்துவ நிலையத்தின் ஊடாக 400 போதை மாத்திரைகளை மாதாந்தம் பெற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கவனம் செலுத்தி மாவட்டத்தின் இளம் சமுதாயத்தை போதைப் பாவனையில் இருந்து காப்பாற்ற முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.