வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் 5 பேர் கைது.

வவுனியா, பூவரசன்குளம், மணியர்குளம் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பூவரசன்குளம், மணியர்குளம் குளக்கட்டின் அருகில் வெட்டு காயங்களுடன் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என்பவர் கடந்த 09 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பூவரசன்குளம் பொலிசார் குறித்த இளைஞருடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 5 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.