விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்!

அநுராதபுரம், திருகோணமலை வீதியில் அனுராதபுரம் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த சொகுசு காரொன்று ஹொரோவ்பதான யாங்கோயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் ஹொரோவ்பதான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினர் திருகோணமலை பகுதிக்கு தனிப்பட்ட தேவைக்காகச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.