இலங்கையின் மூத்த அரசியல்வாதி இரா. சம்பந்தன் காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான இரா. சம்பந்தன் காலமானார்.

91 வயதான அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு (30) காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் தமது 91ஆவது வயதில் காலமானார்.
 
உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு (30) 11 மணியளவில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தமிழர்களுக்கான சம உரிமைகளைக் கோரி, தொடர்ந்தும் நாடாளுமன்றில் குரல் கொடுத்து வந்திருந்த அவர் தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருந்து வந்தார்.
 
1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் பிறந்த இரா. சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி (St. Patrick’s College) , மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணி ஆனார்.
 
லீலாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
சம்பந்தன் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.
 
1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.
 
இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின்படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், கறுப்பு ஜூலை கலவரத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.
 
மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குப்பற்றாமல் போனதால் சம்பந்தன் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி இழந்தார்.
 
பின்னர் 1989ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெறவில்லை.
 
இந்தநிலையில், 2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டணிக் கட்சியொன்றை ஆரம்பித்து, அந்தக் கூட்டமைப்புக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
 
அந்தக் கூட்டணி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாமையினால் அந்த கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது.
 
இந்த தேர்தலில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று 18 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைத் தமிழரின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் சார்பாக தமது நிலைப்பாட்டை முன்னெடுத்தனர்.
 
இந்தநிலைப்பாட்டிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்துக் கூட்டமைப்பில் இருந்து விலகினார்.
 
அத்துடன், 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.
 
இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டதுடன், சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்தநிலையில், 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
 
2015ஆம் ஆண்டு தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கியத் தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.
 
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை பெறாமையினால் இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசு ஒன்றை அமைத்தன.
 
இதனால் 16 ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதுடன், அதன் தலைவர் இரா. சம்பந்தன் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
 
பின்னர் 2020ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அவர் தெரிவானார்.
 
இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு 3 மாதக் கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது.
 
சுகவீனமடைந்துள்ளமையினால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அண்மைய நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றிரவு காலமானார்.
 
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் அவரது பூதவுடல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
 
அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.