நோயாளியை பார்க்கச் சென்றவர் மீது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்குதல்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்ற ஒருவர் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவாக இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பாக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இம்மாதம் 26 ஆம் தேதி மதியம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது தாயாரை பார்ப்பதற்காக இருவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன் போது ஒருவர் மட்டுமே வைத்தியசாலை விடுதிக்குள் சென்று நோயாளரை பார்வையிட முடியும் என பாதுகாப்பு உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏன் பாரபட்சமாக நடக்கிறீர்கள் – வேறு நோயாளியை பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் சில பார்வையாளர்களை அனுமதித்தீர்களே என தெரிவித்து நோயாளியை பார்க்கச் சென்றவர் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஒன்றுகூடிய வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த தபாலக ஊழியர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.