கிளிநொச்சியில்  விபத்து ; காயமடைந்த ஆசிரியை பலி 

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

நேற்று முன் தினம்  இரவு (20.08.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (21.08.2023) உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியையுமான ஜீவரஞ்சினி (ஜீவா ரீச்சர்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன் தினம் (20.08.2023) இரவு கிளிநொச்சியிலிருந்து கணவருடன் உந்துருளியில் வட்டக்கச்சி நோக்கிப் பயணிப்பதற்காக கிளிநொச்சி நகர் ஏ-9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும் போது எதிர் பக்கம் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த ஆசிரியை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.