யாழில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

யாழ் அச்சுவேலி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத குழு ஒன்று பெட்ரோல் குண்டு தாக்குதலில் வீடு பலத்த சேதமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது;

அச்சுவேலி மேற்கு கருமந்திரதுறை வீதியிலுள்ள பாலசிங்கம் சதானந்தன் என்பவரது வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

இவர் பண்ணை ஒன்றை நடாத்திவருவதாகவும் இவரின் சகோதரிக்கும் இவருக்கும் இடையே சொத்து சம்மந்தமான பிரச்சனை இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) சதானந்தன் சகோதரியின் உறவினர் ஒருவரை தாக்கியதில் அவரின் கை முறிந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இரவு 8 மணிக்கு 6 மோட்டார் சைக்கிளிலும்,  ஒரு முச்சக்கர வண்டியிலும் சென்ற குழு ஒன்று குறித்த வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை எறிந்து விட்டு  தப்பி ஓடியுள்ளனர்.

இதில்  ஒரு குண்டு மட்டும் வெடித்து தீப்பற்றியதையடுத்து வீட்டின் சமையலறை பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த எவருக்கும் எதுவிதமான சேதமும் ஏற்படவில்லை என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.