மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதற்கமைய ஹிருணிகா பிரேமச்சந்திர தலா 50,000 ரூபா மற்றும் 500,000 ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
பிணை உத்தரவுகளை அறிவித்த நீதிபதி, பிரதிவாதியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ ஆஜராகியிருந்தார்.
சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார ஆஜராகியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டரில் கடத்திச் சென்று அநியாயமாக தடுத்து அடைத்து தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சிறை தண்டனையுடன் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த தண்டனைகளுக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.