எரிபொருள் பவுசர் வெடிப்பு   94 பேர் பலி

வடமேற்கு நைஜீரியாவில் நேற்று (15) இரவு எரிபொருள் பவுசர் கவிழ்ந்து வெடித்ததில் 94 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜிகாவா மாநிலத்தில் உள்ள ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசரிலிருந்து எரிபொருளை சேகரிக்க மக்கள் விரைந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக நைஜீரிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் பரவியதும், அருகில் வசிக்கும் மக்கள் பலர் டேங்கரில் இருந்து எரிபொருளை சேகரிக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில், பெட்ரோல் சேகரிக்கும் முயற்சியின் போது பவுசர் திடீரென வெடித்து சிதறியதில் 90க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, கடுமையான அபாயங்கள் இருந்தபோதிலும், விபத்து நடந்த இடங்களிலிருந்து ஆபத்தான முறையில் எரிபொருளைச் சேகரிக்க மக்கள் குவிந்ததால் இத்தகைய சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து வெடித்த சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.