புலமைப்பரிசில் வினாத்தாளை வாட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த அதிபர் உட்பட 6 பேர் கைது

அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பரீட்சை மையத்தில் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் நகரம் மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபரும் ஆறு ஆசிரியர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் கடந்த  15 நடைபெற்ற நிலையில் குறித்த பாடசாலையின் பரீட்சை மையத்திற்குள் சென்ற பாடசாலை அதிபர் ஒருவர் பரீட்சையின் முதலாம் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பல ஆசிரியர்களுக்குப் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்களின் கையடக்கத் தொலைபேசிகள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த புகைப்படங்கள் அநுராதபுரம், நொச்சியாகம , கொழும்பு ஆகிய பல்வேறு பிரதேசங்களுக்குப் பகிரப்பட்டுள்ளதாகவும் இத்தகைய விடயங்களால்  பரீட்சைகள் மீதான நம்பிக்கை இழக்கப்படுவதாகவும்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  பரீட்சை திணைக்களம் முற்கொண்டு வருகின்றது.