கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார்.

அவரது அருகில் பிலேட் ஒன்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில்  ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் மக்களின் உதவியுடன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் கணேசன் விஜிதரன் வயது 30  என அவரது சாரதி அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.