விடுவிக்கப்பட்ட காணிக்குள் பொதுமக்கள் போகத்தடை!

யாழ்.தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல வேண்டாம் என காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்போது கண்ணிவெடிகள் காணப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டால் அந்த பகுதிகளை தவிர்த்து ஏனைய காணிகளுக்குள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் பொதுமக்கள் தங்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.