பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டு துப்பாக்கியுடன் கைது!

தென் மாகாணத்தில் இரண்டு கொலைகளை செய்து, மேலும் இரண்டு கொலைகளை செய்வதற்கு பணம் பெற்றுக் கொள்ள முயற்சித்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுப்  பிரிவின் அதிகாரி ஒருவருக்குக்  கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினால் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேக நபர் அம்பலாங்கொடை, வத்துகெதர பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை, வத்துகெதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  அனுமதி பத்திரம் அற்ற ரிவோல்வர் வகை துப்பாக்கி,12 தோட்டாக்கள் மற்றும் 10 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.