போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது.

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் சந்திவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து இன்று காலை மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று காலை முறக்கொட்டாஞ்சேனை மாரியம்மன் ஆலய முன்றிலிலிருந்து பேரணியொன்றை ஆரம்பித்த மாணவர்கள் சித்தாண்டியில் கால்நடை பண்ணையாளர்களின்போராட்டம் ஊர்வலமாக சென்றுகொண்டிருந்த நிலையில் அங்குவந்த பொலிஸார் மாணவர்களுடன் முரண்படும் நிலையேற்பட்டது.

அமைதியான முறையில் பேரணியாக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் இருப்பதாக தெரிவித்து மாணவர்கள் பொலிஸாருக்கு எதிரான கோசங்களை எழுப்பினார்கள்.

பேரணியானது சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பண்ணையாளர்களின் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தபோது அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்ட போராட்டத்திற்கு அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அப்பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் புகைக்குண்டு, குண்டுத்தாக்குதல் நடாத்தும் ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்டிருந்தபோதும் மாணவர்கள் வீதியில் மருங்கில் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருதிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தபோதிலும் மயிலத்தமடு, மாதவனை பகுதியை பாதுகாக்குமாறும் அப்பகுதியில் உள்ள கால்நடை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்குமாறும் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்து, வடகிழக்கு தமிழர்கள் தாயகம், அரசாங்கமே மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதியைக்கொடு, கொல்லாதே கொல்லாதே பசுக்களை கொல்லாதே, வெளியேறு வெளியேறு எமது இடத்தை விட்டு வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இன்னும் எத்தனை நாட்கள் எங்களை நசுக்கப்போகின்றீர்கள், 2009 இனப்படுகொலை, 2010ஆக்கிரமிப்பு, நாளை…?, அம்பாறை, திருகோணமலை போன்று மட்டக்களப்பிலும் வேண்டாம், அன்று ஆயுதங்களால் அழித்தீர்கள், இன்று ஆக்கிரமிப்பினால் அழிக்கின்றீர்கள், ஆக்கிரமிப்பு ஸ்ரீலங்காவின் தேசிய கொள்கையா?, வாயில்லா ஜீவனின் வாயழிக்கச்சொன்னாரா புத்தர்?, உயிர்கொலை புத்தனின் பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கா, எங்கள் மேய்ச்சல் தரைகள் எங்களுக்கே சொந்தம் போன்ற பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமது பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வந்தாறுமூலை, களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி பொலிஸார் அவர்களில் ஆறு பேரை கைது செய்துகொண்டு சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் பயணித்த பேருந்தை இடைமறித்து அவர்களின் அடையாள அட்டைகளை கோரிய நிலையில் இதன்போதே மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனை தொடர்ந்து பல்கலைக்கழக ஆறு மாணவர்களை கைது செய்து சென்றுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த நெவில்குமார், சிந்துஜன், கஜன் ஆகியோரும் கிழக்கு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த ரொபின்சன், விதுசன், ஜஸிதர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரை அச்சுறுத்தும் வகையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்படும் அம்பிட்டிய போன்ற தேரர்களுக்கு இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு போராட்டம் நடாத்தும் மாணவர்களை கைது செய்துள்ளமை கண்டனத்திற்குரியது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.