யாழில் மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 17 வயது சிறுவன் மரணம், 15 வயது சிறுவன் படுகாயம்

யாழ்.பருத்தித்துறை – குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதான சிறுவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று குஞ்சர்கடைப் பகுதியில் காலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருடன் பயணித்த சிவநேசன் கலையொளி (வயது 15) என்பவரே முகம் உட்பட பல பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபர்கள் இருவரும் மோட்டார் சையிக்கிளில் பயணித்த வேளை மாடு குறுக்காக பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் மாட்டுடன் மோதுண்டு பின்னர் மின்சார கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவன் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.