தொலைபேசியை திருடியவனின் வீட்டுக்கு சென்றவர் கொலை,
2 மகன்கள் படுகாயம்

வாய்த்தர்க்கம் முற்றியதில் 55 வயதான நபர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கொலை செய்யப்பட்டவரின் இரு மகன்களும் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்றய தினம் இரவு ராகம – கெந்தலியத்தபாலுவ பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

கொலையைச் செய்த சந்தேகநபரால் உயிரிழந்தவரின் கைத்தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

பின்னர் கொலை செய்யப்பட்ட நபரும் அவரது இரண்டு மகன்களும் சம்பவம் குறித்து விசாரிக்க சந்தேகநபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் குறித்த மூவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

படுகாயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரும் காயமடைந்திருந்ததால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.