கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

யாழ். சேந்தாங்குளம் கடலில் வெள்ளிக்கிழமை (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக இன்று (21)மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.