இலங்கையில் குழந்தைகளிடம் வேகமாக பரவும் நோய்

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்ஃபுளுயன்சாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவித்த குழந்தைகள் நல வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா , குழந்தைகளிடையே இது விரைவாக பரவுவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலிகள், இருமல், சளி ஆகியவை காணப்படும் என்று தெரிவித்த அவர், முன்னர் கொவிட் 19உடன் தொடர்புடையது என்றாலும் தற்போது பலர், இன்ஃபுளுயன்சாவால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது குழந்தைகளிடையே எளிதில் பரவக்கூடும் என்பதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கைகளை தவறாமல் கழுவுமாறும், குறிப்பாக வகுப்பறைகள், பாலர் பாடசாலைகள், வைத்திசாலைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முகக்கவசம் அணியுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இன்ஃபுளுயன்சாவால் பாதிக்கப்பட்ட எவரும் அதிகளவிலான இயற்கை பானங்கள் அருந்துவதுடன், பரிந்துரைக்கப்பட்ட பரசிட்டமோல் எடுத்துக்கொள்வதுடன், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் காய்ச்சலைக் குறைக்க சுடு நீரை அருந்துமாறு பரிந்துரைத்த குழந்தைகள் நல வைத்தியர், சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.