மனைவி வைத்தியசாலையில் – பக்கத்து வீட்டுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்

திருகோணமலை – நாமல்வத்த பகுதியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் தர்ஷினி அண்ணாதுரை முன்னிலையில் குறித்த சந்தேக நபரை இன்று முன்னிறுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக மது போதையில் மனைவியைத் தாக்கியமையால் மனைவி காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் பக்கத்து வீட்டுச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.