2022 பீபா உலகக் கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டீனா

2022 ஆம் ஆண்டுக்கான பீபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று (18) நடைபெற்ற இறுதி போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து ஆர்ஜென்டீனா வெற்றி பெற்றது.

அதன்படி, மூன்றாவது முறையாகவும் பீபா உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா வெற்றி கொண்டுள்ளது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணிக்காக நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி இரண்டு கோல்களை பெற்றார்.

அத்துடன், பிரான்ஸ் அணியின் கைலியன் மப்பே 3 கோல்களை பெற்றார்.

போட்டியின் முதல் பாதியின் முடிவில் ஆர்ஜென்டீனா 2-0 என முன்னிலை பெற்றது.

எனினும், போட்டியின் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் 2 கோல்களை பெற்றுக்கொண்டது.

இதற்கமைய, போட்டி நேர முடிவில் இரண்டு அணிகளும் 2 – 2 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து போட்டியில் மேலதிக நேரம் வழங்கப்பட்டு போட்டி 120 நிமிடங்களாக மாற்றப்பட்டது.

இதிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல் வீதம் பெற்றன.

இதன்படி, 3 – 3 என்ற நிலையில் போட்டி மீண்டும் சமநிலையில் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து, பெனால்ட்டி முறையில் போட்டி நடத்தப்பட்டது.

இதில் 4 – 2 என்ற ரீதியில் ஆர்ஜன்டீனா அணி போட்டியில் வெற்றி பெற்றது.